காதலின் நூறு சம்பவங்கள்
மனுஷ்ய புத்திரன்
............................................
உன்னைக் காதலிக்கத் தொடங்கிய பிறகு
என் வாழ்க்கையில்
நூறு விஷயங்கள் மாறிவிட்டன
அல்லது
நூறு சம்பவங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன
1. எப்போதும் ஏதாவது ஒரு பொய்
சொல்லிக்கொண்டே இருக்கிறேன்
2. தூக்கத்தில்கூட
எதற்காகவோ காத்துக்கொண்டிருக்கிறேன்
3. எதை வாங்க கடைக்குப் போனாலும்
அங்கே உனக்குப் பிடித்த ஒன்று
இருக்கக்கூடுமென நம்புகிறேன்
4. மறைப்பதற்கு ஏதோ ஒன்று
இருந்துகொண்டே இருக்கிறது
5. ஒரு பேருந்தைப் பிடிக்க
ஒரு ஆட்டோ பிடிக்க
ஒரு டாக்ஸி பிடிக்க
அவ்வளவு பதட்டத்துடன் நின்றுகொண்டிருக்கிறேன்
6. என்னாலும் நாணமுற முடிகிறதென்பதை
வியந்துகொள்கிறேன்
7. அவ்வளவு புனிதமானதென்று நம்பிய ஒன்றை
ஒரு காகிதம்போல கசக்கி வீசுகிறேன்
8. எப்போதும் துரோகத்தைப் பற்றியே
நினைத்துக்கொண்டிருக்கிறேன்
9. என் அந்தரங்கமான இடத்தை
இன்னொரு கைதொடுவதுபோல
என் கைகளால் தொட்டுப் பார்த்துகொள்கிறேன்
10. மழைக்காலங்களில்
நான் வாடிப்போகிறேன்
11. ஒரு கதாபாத்திரம் போல
கவித்துவமான வசனங்களை
உருவாக்கிகொண்டே இருக்கிறேன்
12. ஒரு நடிகனைபோல
பாவங்களை
பயிற்சி செய்துகொண்டே இருக்கிறேன்
13. புத்தகங்களில்
உன்னிடம் சொல்வதற்கான வரிகளை
அடிக்கோடிடுகிறேன்
14. எப்போதும் உன்னிடம்
என்னை நிரூபித்துக்கொண்டே இருக்கிறேன்
15. எப்போதும் உன்னிடம்
அன்பிற்கு ஒரு நிரூபணத்தைக்
கேட்டுக்கொண்டே இருக்கிறேன்
16. நீதான் என் வாழ்வின் கடைசி நபரா
என்று குழம்பிப் போகிறேன்
17. இப்போதெல்லாம் நான்
வரவு செலவுகளை
ஒழுங்காக எழுதிவைத்துக்கொள்வதில்லை
18. எனக்கு அழவேண்டும் போல் இருக்கிறது
எதற்காக அழவேண்டும் என்று தெரியவில்லை
19. எனக்கு சிர்க்க வேண்டும்போலிருக்கிறது
எதற்காக சிரிக்க வேண்டும் என்று தெரியவில்லை
20. எனக்கு உள்ளாடைகள் வாங்கும்போது
அதன் வண்ணம் உனக்குப் பிடிக்குமா
என்று நான் யோசிக்கிறேன்
21. நீலப்படங்களில் இருந்து
நீ எதிர்பாராத ஒன்றை
உனக்காக கற்றுக்கொள்ள நினைக்கிறேன்
22. ஆயிரம் பேர் நின்றுகொண்டிருக்கும் இடத்தில்
ஒரு முழுமையான முத்தத்தை
இட்டு முடிக்கும் சாகசத்தை பயில்கிறேன்
23. நூறு பேருக்கு நடுவே
ஒரு மின்னல் கணத்தில்
உன்னை அணைத்து விலகுகிறேன்
24. விஷேச நறுமணமுள்ள பற்பசைகளை
பயன் படுத்துகிறேன்
25. விஷேச நறுமணமுள்ள
ஷாம்பு பயன் படுத்துகிறேன்
26. விஷேச நறுமணமுள்ள
சோப்புகளை பயன்படுத்துகிறேன்
27. விஷேச நறுமணமுள்ள
வாசனைத் திரவியங்களை பயன்படுத்துகிறேன்
28. கண்ணாடி முன்
நிர்வாணமாக நின்றபடி
என்னையே உற்றுப் பார்க்கிறேன்
29. கண்ணாடி முன்
புதிய ஆடைகளுடன்
என்னையே உற்றுப் பார்க்கிறேன்
30. நான் இல்லாத இடங்களில்
நீ என்ன செய்துகொண்டிருக்கக் கூடும்
என்பதையே எப்போதும் நினைத்துக்கொண்டிருக்கிறேன்
31. நீ திடீரென அகால மரணமடைந்துவிட்டால்
அந்த சந்தர்ப்பத்தை எப்படி எதிர்கொள்வேன் என்று
திரும்பத் திரும்ப நினைத்துகொண்டிக்கிறேன்
32. தனக்குத்தானே பேசிக்கொண்டு
சாலையை வேக வேகமாக கடக்கிறேன்
33. காரணமின்றி
எல்லோரையும் நேசிக்கிறேன்
34. காரணமின்றி
எதையும் மன்னிக்கிறேன்
35. உன் உற்று நோக்கும் கண்களைக் கண்டு
அவ்வளவு பயப்படுறேன்
36. உன்னை நினைப்பதற்கான
சிறு தனிமைக்காக
பதைக்கப் பதைக்க நடந்துபோகிறேன்
37. உன்னிடம் வெகு நேரம்
பேசிக்கொண்டிருந்துவிட்டு வந்த பிறகு
உனக்கு ஒரு கடிதம் எழுத நினைக்கிறேன்
38. நான் வழிதவறி சென்றுவிடுவேன்
என்று அவ்வளவு பயப்படுகிறேன்
39. நீ என்னை தற்கொலைப் பாதைக்கு
அழைத்துச் செல்லக் கூடும் என
உன் அணைப்பினூடே நினைத்துக்கொள்கிறேன்
40. நிபந்தனையற்று
எப்படி ஒப்புக்கொடுத்தோம்
என்று திரும்பத் திரும்ப
கேட்டுக்கொள்கிறேன்
41. குடித்துவிட்டு
மனம் உடைந்து அழுகிறேன்
42. துணிக்கடைகளில்
உனக்கு நன்றாக இருக்குமென
ஒரு ஆடையின் முன் நின்றுகொண்டிருக்கிறேன்
43. உனது சாயலுள்ள
நிறையப்பேரை கவனிக்கிறேன்
44. சிரிக்க ஒன்றுமில்லாத விஷயங்களுக்கு
சிரித்துக்கொண்டே இருக்கிறேனு
45. கெட்ட வாரத்தைகளுக்கு
ஒரு ருசி உண்டு என்று முதன்முதலாக
அறிந்துகொள்கிறேன்
46. மலைகளில் இருந்து
பள்ளத்தாக்குகளை பார்க்கும்போது
நீ அதைப் பார்க்கவேண்டுமே என்று
ஏங்கிப் போகிறேன்
47. நான் அடையும் அவமானங்கள்
உனக்குத் தெரியக் கூடாது
என்று நினைக்கிறேன்
48. நான் சொல்லும் பொய்களை
நீ மட்டும் கண்டுபிடிக்கக் கூடாது
என்று விரும்புகிறேன்
49. நான் உன்னை நினைத்துக்கொண்டிருப்பதுபோல
நீயும் என்னையே நினைத்துக்கொண்டிருப்பாய் என்று
அவ்வளவு பைத்தியக்காரதனமாய் நம்புகிறேன்
50. என் அலைபேசியை
அடிக்கடி எடுத்துப் பார்த்தவண்ணம் இருக்கிறேன்
51. உன் அலைபேசியை
உனக்குத்தெரியாமல் எடுத்துப் பார்த்துவிட்டு
அவசரமாக அதே இடத்தில் வைக்கிறேன்
52. ஒரு இனப்புரியாத துக்கத்தை
எப்படிக் கடப்பது என்று தவித்துப்போகிறேன்.
53. ஒரு சிறிய புறக்கணிப்பில்
கசங்கிப் போகிறேன்
54. உன்னை நினைப்பதற்காக
தனியாக இருக்க வேண்டும் என்று
அப்படி ஏங்கிப் போகிறேன்
55. என்னைப் பற்றி உன்னிடம்
நிறைய கட்டுக் கதைகளை
உருவக்குகிறேன்
56. என்னை ஏன் பிடித்திருகிறது
என்று உன்னிடம் கேட்கும் போது
அவ்வளவு பனவீனமாய்
நின்றுகொண்டிருக்கிறேன்
57. நீ என்னை கவனித்துக்கொள்ள வேண்டும்
என்பதற்காவே நோய்மையில்
விழ விரும்புகிறேன்
58. என்னைப்போலவே உனக்கு
வேறு யாரையும் பிடிக்கக் கூடும் என்பதை
நம்ப முடியாமல் திகைத்துப் போகிறேன்
59. உன்னை ஒரு தொலைதூர நகரமொன்றிக்கு
அழைத்துச் சென்று
பயமில்லாமல் புணரவேண்டும்
என்று எப்போதும் நினைத்துக்கொள்கிறேன்
60. என்னுடைய ஒரு பழைய தோழியைப் பற்றி
உன்னிடம் ஒரு மிகையான கதையை
சொல்லிக்கொண்டே இருக்கிறேன்
61. உன்னோடு பார்க்கும் திரைப்படங்களில்
பாதிக் கதை எனக்குப் புரிவதே இல்லை
62. நம்மை யாராவது கவனிக்க வேண்டும் என்று
அவ்வளவு விரும்புகிறேன்
63. உன் பிறந்த தினத்தில்
உனக்கு என்ன பரிசு வாங்கினாலும்
அது விலைகுறைந்ததாகவே தோன்றுகிறது
அல்லது
உனக்கு பொருத்தமற்றதாக தோன்றுகிறது
64. யாரிடமாவது இந்தக் காதலைப் பற்றி
பேசவேண்டுமெனெ விரும்புகிறேன்
65. யாரிடமாவது உன்னைப் பற்றி
புகார் செய்யவேண்டுமெனெ விரும்புகிறேன்
66. என் இளம் வயது காயங்களுக்காக
உன்னிடத்தில் கண்ணீர் சிந்துகிறேன்
அந்தக் காயங்களில் இப்போது
வலி இல்லாத போதும்கூட
67. நீ மிகவும் கனமாக இருந்தபோதும்கூட
எடையற்ற ஒன்றை பாவிப்பதுபோலவே’
உன்னை பாவிக்கிறேன்
68. நீ பேசிக்கொண்டிருக்கும்பொதே
தூங்கிப் போகிறேன்
ஆனால் நீ சொன்ன எல்லாமே
எனக்கு கேட்டுக்கொண்டிருக்கின்றன.
69. வெளிச்சமான இடங்களைக் கண்டு
கூச்சமடைகிறேன்
மங்கிய வெளிச்சங்கள் பாதுகாப்பூட்டுகின்றன
70. யாரோ என்னிடம்
நேசத்தை வெளிப்படுத்துகிறார்கள்
உன் நேசத்த்தின் நிழல்
அதை கருணையின்றி நிராகரிக்க வைக்கிறது’
71. ஒரு தனித்த பயணத்தில்
நீ உடனிருந்திருக்கலாம் என்று
அப்படி ஏங்கிப் போகிறேன்
72. நான் அகால மரணமடையும்போது
யார் அதை உனக்குச் சொல்வார்கள்
என்று குழம்புகிறேன்.
73. வேறு யாரையோ அழைக்கும்போது
உன் பெயரைச் சொல்லுகிறேன்
74. கத்தியின் பள பளக்கும்
விளிம்பைப் பார்க்கும்போது
உன் நாவை நினைத்துகொள்கிறேன்
75. ஒரு பழங்கால கோயிலின்
சிற்பத்தின் முன் நின்றுகொண்டிருக்கும்போது
அப்படியே உன்னைடையத்போன்ற
அதன் முலைக்காம்புகள் கண்டு
திடுக்கிட்டு நிற்கிறேன்
76. நீ ஆடை மாற்றிக்கொள்ளும்போது
கதவுகளைத்திறந்துகொண்டு
உள்ளே வர விரும்புகிறேன்
77. தண்ணீரின் ஆழத்தில்
உன் யோனியின் வாசனை
பரவியிருப்பதை உணர்கிறேன்
78. உன் நண்பர்களை
எந்தக் காரணமும் இல்லாமல்
வெறுக்கிறேன்
79. என்னை நேசிப்பதற்கு
எனக்கு வாழ்க்கையில்
ஒரு காரணம் தேவையாக இருந்தது
உன்னை நேசிக்க வேறொரு காரணமும் இல்லையா?
80. நமக்குள் ஒரு இனிய பொழுது நிகழ்கையில்
அது வெறும் நினைவாகிவிடும்
என்பதை நினைத்து
இபோதே மனமுடைந்துபோகிறேன்
81. உன் நல்லியல்கள்
நிரந்தரமானவை என்றும்
உன் தீய இயல்புகள்
தற்செயலான விபத்துகள் என்றும்
நம்புகிறேன்
82. என் சிறிய துரோகங்களுகாக
நீ சவுக்கால் அடிக்கும்போது
உன் மீதான என் காமம் பலமடங்கு
அதிகரித்துவிடுகிறது
83. உன்னை அறிந்த பிறகு
நிறையப் பேரின்
உடல் அமைப்புகளின்
பல்வேறு நுட்பங்களை கவனிக்கிறேன்
84. நாம் ஏன் ஒருவருக்கு
இவ்வளவு அடிபணிந்துபோகவேண்டும்
என்று என்னை நானே கேட்டுகொள்கிறேன்
85. ஒரு செடிக்கு நீருற்றுவதுபோல
ஒரு காதலுக்குள் வருகிறோம்
ஆனால் அது ஒரு மணல் பரப்பிற்கு
நீருற்றுவதைபோல
நம்மை ஏன் இவ்வளவு உறிஞ்சுகிறது
என்று குழம்பிப் போகிறேன்
86. நீ இல்லாத இடத்திலும்
உன் கண்களை உணந்துகொண்டே இருக்கிறேன்’
87. சிகிட்சையறையில்
தலையை வருடம் தாதியின் கைகள்
உன் கைகளைப் போலவே இருக்கின்றன
88. இன்னும் சில ஆண்டுகளுக்கு முன்பு
நாம் சந்தித்திருந்தால்
இன்னும் நன்றாக இருந்திருப்போம்
என்று நினைத்துக்கொள்கிறேன்
89. என்ன யோசித்துக்கொண்டு
இந்த இடத்தில் வெறுமனே நின்றுகொண்டிருக்கிறீர்கள்
என்று யாரோ என்னிடம் அடிக்கடி கேட்கிறார்கள்
90. நமது ருசிகள்
மாறுபடும் இடங்களில்
என் சகிப்புத்தன்மையை வளர்த்துகொள்கிறேன்
91. என்னைப் பற்றிய உன் ஒவ்வாமைகளை
நீ மறைத்துகொள்ளும்போது
நான் உன் கைகளை இறுகப் பற்றிக்கொள்கிறேன்
92. எந்த மகத்தான காதலுக்குள்ளும்
நாம் வேறு வேறு தனித்த மனிதர்கள்தான்
என்று அறியும் கணங்களில்
நான் அவ்வளவு தனிமைப்படுகிறேன்
93. எல்லா அன்பிற்கும்
ஒரு விலை இருக்கிறது
என்னால் அதை செலுத்தமுடியுமா என்று
எந்நேரமும் யோசித்துக்கொண்டிருக்கிறேன்
94. தெய்வத்தின் முன்
கைகூப்பி நிற்கும் கணங்களில்
உனக்காகவன்றி
எனக்காக எதுவும்
கேட்கத் தோன்றுவதில்லை
95. உன்னை யாருக்காவது
அறிமுகம் செய்யும்போது
எப்படிச் செய்தாலும்
அதில் ஒரு பிழை இருக்கிறது
96. எனக்கு எவ்வளவு நேரம் இருந்தாலும்
இப்போதெல்லாம்
அது போதாமல் இருக்கிறது’
97. இந்தக் காதலை
அது இருக்கிறது என்று உறுதிபடுத்திக்கொள்ள
எனக்கு தினமும் பத்து விஷயங்களாவது
தேவைப்படுகின்றன
98. இதை எப்படி
ஒரு விளையாட்டாக நினைத்து தொடங்கினோம்
என்பதை நினைக்கும்போது
என் பைத்தியகாரத்தனதின் கன்னத்தில்
ஒரு அறைவிடவேண்டும் போலிருக்கிறது
99. ஒரு முத்தம் என் உடலை
இவ்வளவு எடையற்றதாக்கும் எனில்
ஒரு பிரிவு
என் உடலை இவ்வளவு கனத்துப் போகச்செய்யும் எனில்
இது என் உடல்தானா என்று கேட்டுகொள்கிறேன.
100. நீ என் பானத்தில் விஷம் கலந்துவிடும் நாளில்
’உன்னை கடைசியாக ஒரு முறை கூடிகொள்ள
அவகாசம் இருக்குமா?’ என்று மட்டுமே
உன்னிடம் கேட்க விரும்புகிறேன்